Saturday, November 29, 2008

இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா.??

புதன் இரவு 12.30 மணியிலிருந்து தொடர்ந்து சனிக்கிழமை காலை 11.30 வரை எறத்தாழ 44 மணி நேரம் தொடர்ந்து தொலைகாட்சியில் மூழ்கிவிட்டேன்.


மகள் பார்க்க ஆசைப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியினைகூட பார்க்க அனுமதிக்காகமல் செய்தி தொலைகாட்சிகளை பார்த்து கொண்டிருந்தேன். இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா என்று மகள் கேட்ட போது மும்பையில் எல்லாமே முடிந்துவிட்டிருந்து. :(-

இப்படி தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்ததால் என் மகள் தெரிந்து கொண்ட (தேவையே இல்லாத) விஷயங்கள்

ஏ.கே 47,வெடிக்குண்டு,5 நட்சத்திர விடுதி அமைப்புகள்,அறை வாடகை,பாகிஸ்தான் தீவிரவாதம்,முஸ்லீம் தீவிரவாதம்,நெரிசல் மிகுந்த மும்பை வாழ்க்கை,கருப்பு பூனைப்படை,காமாண்டோ படை

என்னுடை செயலால் தேவையில்லாத விஷயங்களை என் மகள் மீது திணித்து விட்டேனோ என்று மனசாட்சி உறுத்துகிறது

மரத்துப்போன மனசு..என்ன செய்வதென்று தெரியாமல் அலுவலகம் நோக்கி காலார நடந்து வந்துவிட்டேன் :(-

Monday, November 03, 2008

இந்தியாவிலுள்ள ஏதிலிகள் முகாம் ஒரு பார்வை

இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள் மற்றும் ஈழத்தமிழ் ஏதிலிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

கர்நாடகாவிலுள்ள திபெத்திய ஏதிலிகள் முகாம்:

திபெத்திய ஏதிலிகள்

ஏதிலிகள் எண்ணிக்கை
ஒரு முகாம் (22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
5,232 ஏதிலிகள் உள்ளனர்.

வாழ்விடம்

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்).

சுகாதார வசதி

தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை (5 மருத்துவர்கள், 15 செவியர்களுடன் இயக்கப்படுகிறது)
அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறை

கலாச்சாரம்

ஆனால் திபெத்திய ஏதிலிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. (நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அது குட்டி திபெத் போல் தெரிந்தது)

மத சுதந்திரம்

தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் (சுமார் பரப்பளவு 1 ஏக்கர் நிலத்தில்)
தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,
அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,
தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட

கல்வி

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய ஏதிலிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.
பின் 11, 12 படிக்க அரசே உதவி செய்து சிம்லா அனுப்பி வைக்கிறது. (அனைத்து செலவுகளையும் ஏற்று)
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. (அரசு செலவுடன்)
திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அகதிகள் என்ற முத்திரையுடன்.

விவசாய நிலம்

மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது.
22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள்.

வங்கி

மொத்தம் நான்கு வகையான வங்கிகள்
சிண்டிகேட் வங்கி
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்
கூட்டுறவு வங்கி
வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.
அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி

குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஆய்வு

திபெத்திய ஏதிலிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய ஏதிலிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் ஏதிலிகள்
ஈழத்தமிழ் ஏதிலிகள்

ஏதிலிகள் எண்ணிக்கை
மொத்தம் 103 முகாம்கள் உள்ளன.
ஏழத்தாழ 75,000க்கும் மேல உள்ளனர்.
(தினந்தோறும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டு இருக்கின்றனர்).

வாழ்விடம்

அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள்.
90% வீடுகளில் மின்சாரமே இல்லை.
பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

சுகாதார வசதி

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்று பார்த்துக் கொள்ளலாம்.
பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.
பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை.

கலாச்சாரம்

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம். அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்.

மத சுதந்திரம்

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்த்தது எங்கள் அறியாமையே.

கல்வி

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாக சொல்கிறது. மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ளது.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக ஏதிலிகளால் நியமிக்கப்பட்ட ஏதிலிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது.
உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது (வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியுண்டாம். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்)

விவசாய நிலம்

குடியிருக்க இடம் கொடுக்காத நாட்டில் விவசாய நிலம் கேட்பது நம் முட்டாள்தனம் தான்.

தகவல் தொடர்பு

நாட்டுப் பிரச்சனைகள் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் இதற்கு முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி.
மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கடுமையான நிபந்தனையுடன்.
பண உதவி மற்றும் பொருளுதவி

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழக்கப்படுகின்றது.

ஆய்வு

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடைபெறுகிறது.
ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றி (ஈழம்) பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.தன் நாட்டை விட்டு இங்கு வரும் ஏதிலிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சிறை சித்திரவதைக்கூடம். இந்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை விட்டுவிட்டு திபெத்திய ஏதிலிகளைப் போல் தமிழர்களை பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் ஏதிலிகளாக வரும் தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையை பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாததினை அளிக்க வேண்டும்.
மேற்கண்டவைகள் அனைத்தும் நாம் தமிழகத்தில் காணலாம்.

இதில் திபெத்தியர்களை விட ஈழத்தமிழர்கள்தான் அந்தியசெலவாணி வரவினை அரசுக்கு ஈட்டிக்கொடுக்கின்றனர். திருட்டு VCD காரணமாக திரைப்படத்தொழில் மூழ்கும் அபாயம் இருந்த பொழுது அதை தூக்கி நிறுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள்தான். இந்தியாவைத்தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏதிலியாக சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் இந்திய அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிறார்கள்.

சிங்களவர்களின் பூர்வீகம் இந்தியா என்பதாலா? ஒரிசா மற்றும் வங்காள தேசத்தை தாயகமாக கொண்டவர்கள்தான் சிங்களவர்கள் என்பதால்தானா இந்திய அரசு தமிழர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது. இலங்கை என்பது தமிழர்களின் தாயகம்சிங்களவர்கள் இந்தியாவைச்சேர்ந்த வந்தேறிகள் என்பதால்தானா?

உண்மை வெல்லும் ஒரு நாள் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும் விரைவில்.

நன்றி:-தமிழ்விண் இணையம்
http://www.tamilwin.com/view.php?20IWnp20e1j0A2ebiG7X3bdF9EY4dc82h2cc41pO2d43oQH3b02PLI3e